விழிப்புடன் இருங்கள்!
அரசியல் வன்முறை—பைபிள் என்ன சொல்கிறது?
உலகம் முழுவதும் அதிகரித்துவரும் அரசியல் வன்முறையால் மக்கள் பயத்திலும் கவலையிலும் இருக்கிறார்கள்.
மெக்சிகோவில் 2023-2024 தேர்தல் சமயத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு அரசியல் வன்முறை வெடித்திருக்கிறது. 39 வேட்பாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு விதமான அரசியல் வன்முறைகளும் நடந்திருக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் பயமும் குழப்பமும் அதிகமாகியிருக்கிறது.
சமீப காலங்களாக, ஐரோப்பாவில் எக்கச்சக்கமான அரசியல் வன்முறைகள் நடந்திருக்கின்றன. மே 15, 2024-ல் ஸ்லோவாக்யாவின் பிரதம மந்திரியைக் கொலை செய்யவும் முயற்சி செய்யப்பட்டிருக்கிறது.
ஜூலை 13, 2024-ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.
அரசியல் வன்முறை ஏன் இந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது? இதற்கு ஒரு முடிவு வருமா? பைபிள் என்ன சொல்கிறது?
அரசியல் பிரிவினைகள்—முன்பே சொல்லப்பட்டது
நம்முடைய காலத்தில், அதாவது “கடைசி நாட்களில்,” மக்களுடைய மனப்பான்மையால் அவர்கள் எதற்குமே ஒத்துப்போக மாட்டார்கள், அதனால் வன்முறைகள் வெடிக்கும் என்று பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது.
“கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும். . . . ஏனென்றால், மனிதர்கள் . . . நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, . . . எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, . . . கொடூரமானவர்களாக, . . . நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-4.
இந்தக் காலத்தில், அரசியல் கலவரங்களும் புரட்சிகளும் சர்வசாதாரணமாக நடக்கும் என்றுகூட பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது. (லூக்கா 21:9) அதேசமயத்தில், இதுபோன்ற அரசியல் வன்முறைகளும் பிரிவினைகளும் என்றென்றைக்குமே இருக்கப்போவதில்லை.
அரசியல் வன்முறைக்கு முடிவு
பரலோகத்தில் இருக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் மூலம், மனித அரசாங்கங்களை எல்லாம் கடவுள் நீக்கிவிடுவார் என்று பைபிள் சொல்கிறது.
“பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். . . . அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 2:44.
கடவுளுடைய அரசாங்கம் மனிதர்கள் எல்லாரையும் ஒற்றுமையாக வாழ வைக்கும், உலகம் முழுவதும் சமாதானத்தைக் கொண்டுவரும்.
அதன் ராஜா இயேசு கிறிஸ்து, “சமாதானத்தின் அதிபதி” என்று அழைக்கப்படுகிறார். அவருடைய ஆட்சியில் ‘சமாதானத்துக்கு முடிவே இருக்காது.’—ஏசாயா 9:6, 7.
இன்றைக்கே, அதன் குடிமக்கள் சமாதானமாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—ஏசாயா 2:3, 4.
இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?” என்ற கட்டுரையையும் கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவையும் பாருங்கள்.